மதுரை மக்களின் கனவு நனவானது... அரசாணை வெளியீடு!
Posted on 04/05/2022
மதுரையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க கோரிப்பாளையம் பகுதியில் ரூ.199 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது.
மதுரை மாநகரில் மிக முக்கியமான சந்திப்பாக விளங்க கூடியது கோரிப்பாளையம் சந்திப்பு. இந்த பகுதியில் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, 199 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த பாலமானது மதுரை மாநகராட்சி மேற்கு நுழைவாயில் தொடங்கி சிம்மக்கல் வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் செல்லும் எனவும், இந்த பாலத்தில் பீபீ குளம் பகுதி செல்லூர் பகுதிகளை இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தவிர வைகை ஆற்றின் ஏவி பாலம் அருகே கூடுதலாக ஆற்று பாலம் ஒன்று அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாலத்தின் கீழ் பகுதியில் தற்போது இருப்பது போன்றே தேவர் சிலையை அமைக்க திட்டமிடபட்டுள்ளது, மேலும், அதற்கான முப்பரிமாண காட்சியையும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் மூன்று ஆண்டுகளுக்குள் பணியை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: News