உயர்ந்தது ஆவின் நிறுவன பால் விலை!
Posted on 21/07/2022
5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஆவின் நிறுவன பால் பொருட்களின் விலைகளை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சண்டிகரில் நடைபெற்ற இரண்டு நாள் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு பல பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்த்தப்பட்டது. இதில் பல உணவு பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டது, இதனால் பல அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளும் உயர்ந்து இருக்கிறது. இந்த விலையேற்றத்தால் நடுத்தர, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக பலரும் இந்த வரி உயர்வுக்கு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தின் பொருட்களின் விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது.
அதன்படி 200 கிராம் தயிர் விலை 25 ரூபாயில் இருந்து 28 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது, 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது, அரை லிட்டர் நெய் விலை 275 ரூபாயில் இருந்து 290 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு லிட்டர் நெய் விலை 535 ரூபாயிலிருந்து 580 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவின் பொருட்களின் நம்பகத்தன்மை காரணமாக பல மக்களும் இந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இதன் விலைஉயர்வு பலருக்கும் கவலையளித்துள்ளது.
மேலும் பிரிண்டிங் / எழுதுதல் அல்லது வரைதல் மை, எல்இடி விளக்குகள், விளக்குகள் மற்றும் சாதனங்கள் மற்றும் உலோக அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சோலார் வாட்டர் ஹீட்டர் மற்றும் சிஸ்டம்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் உற்பத்தி தொடர்பான வேலைப் பணிகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தகனம் ஆகியவற்றுக்கான விகிதம் 12 சதவீதத்திலிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெட்ரா பேக் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், கட் மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களின் விலை 0.25 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Tags: News