ஜல்லிக்கட்டு போராட்டத்தை பெண்கள் கையிலெடுப்பு : அலங்காநல்லூரில் பரபரப்பு
Posted on 17/01/2017
உச்சநீதிமன்ற உத்தரவினால் கடந்த சில ஆண்டுகளாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் பிரசித்த பெற்ற ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.
ஜனவரி 16ஆம் தேதியான நேற்று லங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. 21 மணிநேரத்திற்கு மேல் போராட்டம் நடத்தியவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை போலீஸ் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வேனில் ஏற்றியது. இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி அலங்காநல்லூர், வாடிப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர். எங்களுக்காக போராடிய மாணவர்களை எப்படி கைது செய்யலாம் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் வரை நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்றும் பெண்கள் தெரிவித்தனர். பெண்களுக்கு மத்தியில் மாவட்ட எஸ்.பி விஜயேந்திர பிதாரி சமாதான பேச்சு வார்த்தை நடத்தியும் அதனை பெண்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். ஜல்லிக்கட்டு கோரி போராடும் காளைகளுக்காக பெண்களும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளதால் அலங்காநல்லூர் போர்களமாக மாறியுள்ளது.
Tags: News, Madurai News