மருதமலை முருகன் கோயிலில் ரோப் கார் வசதி கோரிய எம்எல்ஏ!
Posted on 23/03/2022
மருதமலை கோவிலில் மக்களின் பயன்பாட்டிற்காக மின் தூக்கி அமைக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அர்ச்சுணன் கேள்வி எழுப்பினார்..
இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், கோவை மாவட்டம் மருதமலை சுப்ரமணிய சாமி கோயிலுக்கு கம்பிவட சேவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் மண்பரிசோதனை மேற்கொண்டத்தில் அதற்கான சாத்திய கூறு அங்கு இல்லை என அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
மருதமலை கோயிலில் உள்ள 100 படிக்கட்டுகளை ஏறி செல்ல மக்கள் சிரமப்பட்டு வரக் கூடிய நிலையில், 11 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆய்வின் அடிப்படையில் 3 கோடியே 36 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மின்தூக்கி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும், அடுத்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்துவைக்க உள்ளதாகவும் கூறினார்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில், மருதமலை கோவில் மின்தூக்கி அமைக்க அதிமுக ஆட்சிக்காலத்தில் விடப்பட்டுள்ள டெண்டர் single tender என்பதால் ரத்து செய்யப்பட்டதாகவும், திமுக ஆட்சி அமைத்தபின் கூடுதலாக 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மின் தூக்கும் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags: News