ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்களின் ஒருங்கிணைந்த போராட்டம்
Posted on 18/01/2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் தமிழகம் முழுவதும் நடத்தும் போராட்டம் நொடிக்கு நொடி தீவிரடைந்து வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள், போலீசார் என அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தியும், பிடியை கொஞ்சமும் தளர்த்தாமல், இளைஞர்கள் போராட்ட களத்தில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அலங்காநல்லூரில், 3வது நாளாகவும், சென்னை மெரீனா, நெல்லை, கோவையில் 2வது நாளாகவும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். இருந்தும் அவர்கள் கொஞ்சமும் சோர்வடையாமல் உற்சாகமாக தங்களின் போராட்டத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதியும், பீட்டாவுக்கு தடையும் கொண்டு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாகவும், அதுவரை, தங்களின் போராட்டம் ஓயாது எனவும் உறுதியாக உள்ளனர். இளைஞர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்தால் கலவரம் தான் வெடிக்கும் என்ற கூற்றை பொய்யாக்கி, இதுவரை எங்கும், எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அமைதி வழியில் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருவது பலரையும் மிரம்மிக்க வைத்துள்ளது.
யாரும் போராட்டத்திற்கு அழைக்காமல், தாங்களாகவே சமூக வலைதளங்கள் வாயிலாக ஒன்றிணைந்து முன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், அரசியல் கட்சியினர் பலரும் ஆதரவு தர முன்வந்தும், அத்தனையை புறந்தள்ளி, எழுச்சியுடன் இளைஞர்கள் நடத்தி வரும் இந்த போராட்டம் உலக நாடுகளையே தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மாணவர்கள் களமிறங்கிய எந்த ஒரு போராட்டமும் இதுவரை தோல்வி அடைந்ததில்லை என்ற வரலாறு சான்றுகள் உள்ளதால், ஜல்லிக்கட்டுக்காக தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டமும் வெற்றி அடையும், இந்த ஆண்டே ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்ற நம்பிக்கை பலரின் மனதில் எழுந்து வருகிறது. மாணவர்கள் அமைதியான முறையிலேயே போராட்டத்தை தொடர்ந்து வருவதால் போலீசாரும் மாணவர்களின் போராட்டத்திற்கு எந்த தடையும் விதிக்காமல், மாறாக அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
Tags: News, Madurai News, Art and Culture