திருச்சி மேயர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Posted on 24/03/2022
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 95 விழுக்காடு இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றி எதிர்கட்சிகளுக்கு மாபெரும் அதிர்ச்சி அளித்தது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் திமுக, 49, காங்கிரஸ் - 5, அதிமுக - 3, மதிமுக -2, அமமுக-1, சிபிஐ-1, சிபிஎம்-1, விசிக -1 ஒரு இடத்தில் வென்றுள்ளது. மேயரை பொறுத்தவரையில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தீவிர விஸ்வாசியாக உள்ள திருச்சி மாநகர செயலாளர் மு.அன்பழகன் என்பது திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இருந்தாலும் கட்சித் தலைமை அறிவிக்கும் வரை காத்திருந்தனர்.
பின்னர், கட்சித் தலைமை மேயராக அன்பழகனையும், துணை மேயராக திவ்யாவை அறிவித்தது. மார்ச் 4-ம் தேதி மேயர் தேர்வுக்கான மறைமுக தேர்தலில் இருவரையும் எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
மேயர் அன்பழகனை பொறுத்தவரையில் திருச்சி மாநகராட்சி குறித்த அனைத்து விபரங்களையும் அறிந்தவர். தொடர்ந்து 5 உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று வார்டு உறுப்பினர், இருமுறை துணை மேயர் பதவிகளை அலங்கரித்துள்ளார். அதனால், திருச்சி மாநகராட்சியில் A - Z அனைத்து விபரங்களும் அவருக்கு தெரியும் என கூறப்படுகிறது.
27-வது வார்டு கவுன்சிலர் தேர்தலின் போது அன்பழகன் சமர்பித்துள்ள பிரமாண பத்திரத்தின் படி,மேயர் அன்பழகன் பெயரில் அசையும் சொத்துக்கள் 18 லட்சத்து 80 ஆயிரமும், மனைவி சித்ரா பெயரில் 32 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேயர் அன்பழகன் பெயரில் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் ஏதும் இல்லை. ஆனால், மனைவி பெயரில் 13 லட்சத்து 8 ஆயிரத்து 160 மதிப்புள்ள சொத்து உள்ளது. மொத்தமாக மேயர் அன்பழகன் பெயரில் 39 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே உள்ளது. அவரது மனைவி பெயரில் 91 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Tags: News