மதுரை மாவட்டத்தில் தலைதூக்கும் கஞ்சா கலாச்சாரம்!
Posted on 11/03/2022
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்ற இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பனையூர் பகுதியில் காலமாக கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த வண்ணம் இருந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆலோசனையின்படி பனையூர் காவலர்கள் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்றும் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக இரகசிய தகவல் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அந்த தகவலின் பேரில் மாவட்ட தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் இருவர் சந்தேகத்திற்கு இடமாக நடந்துகொண்டனர்.
அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் பெயர் பாலு என்றும் மற்றொருவர் பெயர் சுரேஷ் என்றும் அவர்கள் இருவரும் அந்த பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களை உடனடியாக தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சா, 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இது குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, கஞ்சா பழக்கம் மற்றும் கடத்தல் ஆகிய வேலைகளை செய்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான தக்க நடவடிக்கை கடுமையாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
Tags: News