பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்கள் உள்ளிட்டோரிடம் தவறாக பேசியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், மதன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.

பப்ஜி மதனுக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்ததையடுத்து ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழிக்கு கொண்டு செல்வதாக அளிக்கப்பட்ட புகார்களை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி தர்மபுரியில் மதன் கைது செய்யப்பட்டார்.
 
பின்னர் சைபர் சட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மதன் தரப்பில், விளையாட்டின் போது பேசிய வார்த்தைகளை மட்டுமே காரணம் காட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் விளையாட்டில் கலந்துகொள்ள அறிவுறுத்தி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
 
ஏற்கனவே ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் மற்றும் 2 கார்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும் 316 நாட்களாக சிறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில், விளையாட்டில் கலந்து கொண்டவர்களிடம் கொரோனா நிதி என கூறி 2 கோடியே 89 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளதாகவும், விளையாட்டில் சேரும் சிறுவர்களை தவறான வழியில் நடத்தியதாகவும் வாதிடப்பட்டது.
 
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்கள் உள்ளிட்டோரிடம் தவறாக பேசியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில், மதன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.
 
இதையடுத்து, மதன் தரப்பில் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதி இளந்திரையன், மனுவை வாபஸ் பெற அனுமதித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top