+2 தேர்வில் சிக்கிய 5 கிலோ பிட் பேப்பர்கள்!
Posted on 18/05/2022
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள அரசு பொதுத்தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் காப்பி அடிக்க மறைத்து வைத்திருந்த 5 கிலோ அளவிற்கு மைக்ரோ ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவலால் ஏற்பட்டிருந்த சிக்கல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த ஆண்டு பொதுத்தேர்வுகளை முழுமையாக நடத்த பள்ளி கல்வித்துறை முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அரசு தேர்வுத்துறை பொது தேர்வுகளை நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, அதை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தி இருக்கிறது. அந்த வழிகாட்டு நெறிமுறையில் தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்கள் எப்படி செயல்பட வேண்டும்? பறக்கும் படையினர் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்? என்பது தொடர்பாக, விரிவாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மே 5ம் தேதி தொடங்கி உள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்பிற்கான கணிதத் தேர்வு இன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு தொடங்குவதற்கு முன் தேர்வுத் துறை இணை இயக்குனர் பொன் குமார் தலைமையிலான பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களை சோதனை செய்தனர்.
இந்த அதிரடி சோதனையில் நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள அரசு பொதுத்தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் காப்பி அடிக்க மறைத்து வைத்திருந்த 5 கிலோ அளவிற்கு மைக்ரோ ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவைகள் தீயிட்டு அழிக்கப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து அனைத்து தேர்வு மையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் நாமக்கல் மாவட்ட தேர்வு கண்காணிப்பாளரும், அரசு தேர்வுகள் இணை இயக்குனர் பொன்.குமார் தெரிவித்தார். அதே சமயம் பள்ளி மாணவர்களுக்கு மைக்ரோ பிட் எடுத்து கொடுத்த ஜெராக்ஸ் கடையின் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags: News