சமூக வலைதளத்தினால் மூளை தடுமாற்றம்!
Posted on 22/03/2017
சமூக வலைதளம் எனச் சொல்லப்படுகின்ற முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப் முதலியவற்றுடன் அதிக நேரத்தை செலவழித்தால் மூளை தடுமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகளின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த புதிய ஆய்வின்படி, எப்பொழுதெல்லாம் மூளை தொடர்பான, கண்டு கொள்ளக்கூடிய நடத்தை முறையில் தடுமாற்றம் ஏற்படுகின்றதோ அப்பொழுது சம்பந்தப்பட்டவர் பிரச்சினைக்குரிய அளவில் சோசியல் நெட்வொர்க்கிங் சைட்ஸ் எனச் சொல்லப்படுகின்ற எஸ்என்எஸ்ஐ அதிகமாக பயன்படுத்தக்கூடியவராக இருப்பார் என்பது அறியப்பட்டுள்ளது.
ஒருவர் தொடர்ந்து முகநூலை வாகனம் ஓட்டும்போதும், கூட்டங்கள் நடத்தும்போதும் மற்றும் இதர நேரங்களிலும் உபயோகப்படுத்தும் போது அந்த செயலானது ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக மூளையின் இரண்டு செயல்பாடுகளிலும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது. இந்த தகவலானது “ஜெர்னல் ஆப்மேனேஜ் மெண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ்”என்னும் ஆய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வின் மூலமாக தெரியவருவது என்னவென்றால் மூளையில் இரண்டு விதமான செயல்பாடுகள் உள்ளன எனவும், அவை முடிவுகள் எடுப்பதற்கான காரணிகளாகவும் இருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஜெர்னல் ஆப் மேனேஜ் மெண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ்ஸின் ஆய்வில் தலைமை வகித்த ஹமிட் குவாரி சரேமி, முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப் முதலிய சமூக வலைதளங்களை ஒருவர் தொடர்ந்து இடைவிடாது பயன்படுத்தும்போது அந்த செயலானது சம்பந்தப்பட்டவரின் நரம்புகளை பாதிப்பதோடு மூளை தடுமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று அறுதியிட்டு கூறுகின்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஒருவர் சமூக ஊடகங்களில் தன்னை மறந்து, சுற்றுச்சூழலை மறந்து ஒரே நோக்கத்தோடு தொடர்ச்சியாக அதில் மூழ்கிவிடும்போது பலவிதமான நடத்தை பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார் என்பது தெள்ளத்தெளிவு என்கின்றார்.
ஒரு பெரிய வடஅமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவர்கள் 341 பேரிடம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் முகநூல் ஊடகத்தை மிக அதிகமான அளவில், அதாவது வகுப்பறைகளிலும், வாகனம் ஓட்டும்போதும், மற்றவர்களிடம் பேசும்போதும் பயன்படுத்திய மாணவர்கள் அனைவரையும் மனரீதியான பாதிப்பும், உணர்வு ரீதியான பதட்டங்களும் தொற்றிக் கொண்டுள்ளன என அறியப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாணவரும் எடுத்துக்கொண்ட நேரமானது சதவீதத்தில் கணக்கிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களை அசாதாரணமான முறையில், கல்வி பயின்றுவரும் மாணவர்கள் உபயோகப்படுத்தும் போது அதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் மிகவும் கண்கூடானது எனவும், மாணவர்களின் திறமைக்கேற்ற மதிப்பெண்களை பெறுவதில் மிகப்பெரிய சறுக்குகளை இது உருவாக்கும் என்றும், மொத்தத்தில் மாணவரின் கல்வி கற்கும் திறன் குறைக்கப்படுகின்றது என்றும் நல்ல வெற்றி இலக்குகளை அடைவதில் பின்னடைவுகளை ஏற்படுத்துகின்றது எனவும் ஆய்வு குழுவின் தலைவரான ஹமிட் குவாரி சரேமி தம்முடைய சக ஆய்வாளர் ஆபிர்டரல் உடன் சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எனவே, மாணவர்களும் மற்றவர்களும் தங்களுடைய மனதையும் உடலையும் பாதிக்கின்ற வெகு-நேர சமூக வலைதள பயன்பாட்டினை அறவே தவிர்த்திடல் வேண்டும் என்பது தெளிவாகின்றது. பல நாடுகளில் இதன் பொருட்டு எடுக்கப்பட்ட எத்தனையோ ஆய்வுகளும் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.
அளவுக்கு மீறும்போது விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்கூட மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக இருக்கும் என்ற உண்மையினை உள்ளபடி உணர்ந்து அனைவரும் சமூக வலைதள பயன்பாடுகளை எப்போதும் கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
Tags: News, Lifestyle