Used Mobiles-க்கான வர்த்தகத்தை செம்மைப்படுத்துவோம்!
Posted on 22/03/2017
கடந்த வாரம் மதுரை செயின்ட் மேரிஸ் சர்ச் அருகில் பள்ளி மாணவர் நாகராஜனுக்கு நடைபெற்ற துயரமான சம்பவம் மதுரை மக்களை பெரிதும் உலுக்கியுள்ளது. சாதாரணமாக தெருவோரம் சென்று கொண்டிருந்தவரை இழுத்து அடித்து அவரை கொலை செய்தது ஏன் என்கிற ஒரு கேள்விக்கு, எல்லாம் ஒரு செல்போனிற்காகதான் என்கிற விடையே கிடைக்கிறது.
இன்று செல்போன் என்பது அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது. தற்போது அது ஒருபடி முன்னேறி ஆடம்பரமான செல்போன் அவசியம் என்கின்ற நிலையை அடைந்துள்ளது. எல்லோருக்கும் ஆடம்பரமான செல்போன் வாங்க வேண்டுமென்கிற கனவு, ஆசையாக, வெறியாக மாறிவிடுகிறது. இதனால் அதிக செலவு செய்து வாங்க முடியாதவர்கள் உபயோகிக்கப்பட்ட செல்போன்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இன்று அதிகளவில் செல்போன் திருட்டில் சிறார்கள்தான் ஈடுபடுகிறார்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இன்று அரசாங்கம் எல்லா விஷயங்களுக்கும் ஆதார் அட்டையை முக்கியப்படுத்துகிறது. அதனையே பின்பற்றி செல்போன் வியாபாரிகள் விற்க வருவோரின் ஆதார் அட்டையின் நகல், விற்கும் செல்போனின் மாடல், அதன் IMEI நம்பர், அவரது கையெப்பம் ஆகிய தகவல்களையும், வாங்க வருபவரிடமும் அதே தகவலையும் பெற்றுக்கொண்டால் போதுமானது. நிச்சயம் இந்த எச்சரிக்கை நடவடிக்கை செல்போன் திருட்டு விற்பனையை பெருமளவில் குறைப்பதுடன், சிறார்கள் இத்தகைய குற்றங்களில் ஈடுபடாமல் இருக்கவும் செய்யும். சற்று சிந்திப்போம், சமுதாய சீர்திருத்த சிந்தனையுடன் செயல்படுவோம், உயிரிழப்பற்ற அமைதியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் எழுப்புவோம்.
Tags: News, Lifestyle