ஒரு பாடலுக்குக் கிடைத்த அமோக வெற்றி!
Posted on 19/10/2016
‘மக்க கலங்குதப்பா’ அப்படிங்கிற பாடல்தான் இன்று அதிகமாய் ரேடியோவிலும், டிவியிலும், இளைஞர்களின் கைப்பேசியிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் அதிரடி நாட்டுப்புறப்பாடல். கேட்போரை எல்லாம் ஆட வைக்கும் அந்தப்பாடல் பிரபல நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடித்து வெளியான ‘தர்மதுரை’ என்னும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்தப் பாடலின் சொந்தக்காரர் தான் திரு. மதிச்சியம் பாலா அவர்கள். யார் இந்த மதிச்சியம் பாலா? என்கிற கேள்வியோடு தீபாவளி சிறப்பிதழுக்கான நேர்முக காணலைத் துவங்கினோம். தீபாவளி சிறப்பு அட்வென்சர் இதழுக்கான நேர்முக காணலுக்காக அவர்களை சந்தித்தோம்.
* யார் இந்த மதிச்சியம் பாலா?
மதுரை மதிச்சயத்தில் கோவில்களிலும் திருவிழாக் களிலும் நாட்டுப்புறப்பாடல் பாடுபவன்தான் இந்த நந்தா பாலா. திரைத்துறையில் எனக்கென ஒரு தனிப்பெயர் அமைந்திட திரு.சீனு ராமசாமி அவர்களால் மதிச்சியம் பாலாவாக மாற்றப்பட்டேன்.
* திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி..
இன்றுவரை திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது ஒரு கனவைப் போலதான் உள்ளது. பரையாட்ட கலைஞர் திரு. வேலு என்பவர், நாட்டுப்புறப் பாடல் நன்கு பாடுபவர் வேண்டும் என என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி எனக்கு தெரிந்தவர்களை அனுப்பினேன். அவர்களுக்கு அதில் திருப்தி இல்லை. எனவே, நான் பின் சென்றேன். அங்குதான் இயக்குநர் சீனு ராமசாமி அவர்களை சந்திதேன். அப்போதுதான் திரைப்படத்திற்கு பாட வேண்டுமென எனக்கு சொன்னார். அதனைக் கேட்டு, அங்கேயே நான் எழுதிய பாடல் தான் ‘மக்க கலங்குதப்பா’. இது யுவன்சங்கர்ராஜா அவர்களுடன் கிடைத்த அனுபவம்..
அவரை பார்த்தவுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தேன். மிகவும் எளிமையானவர். பின் பாடல் ரெக்கார்டிங்குக்காக சென்று ஒரே டேக்கில் அதை முடித்துவிட்டு, பின் கிட்டதிட்ட அறை நாள் அவருடனே செலவளித்தேன். நிச்சயம் மறக்க முடியாத அனுபவம்.
* திரையில் தோன்றி யது பற்றி?
ஒரு சமயம் என்னை திரைப்பட குழுவில் இருந்து தொடர்புகொண்டு, நல்ல ஆடையை எடுத்துக் கொண்டு வரச்சொல்லிக் கூறினார்கள். பாடல் தொடர்பாக தான் என நானும் சென்றிருந்தேன். அங்குதான் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது ஒரு இறப்பு நிகழ்ந்த வீடு. பெரிய வீட்டு இறப்பு என்பதால் அதை படம் பிடிக்கிறார்கள் என நினைத்தேன். அப்போது இறந்திருந்த நபர் எழுந்ததைக் கண்டு கதிகலங்கி போனேன். அப்போதுதான் அது திரைப்பட சூட்டிங் என எனக்கு தெரிந்தது. அப் போது திரு.சீனு ராமசாமி அவர்கள் மைக்கிடம் சென்று நில் என கூறினார். அப்போதுதான் நானும் திரையில் தோன்றப்போகிறேன் என தெரிந்தது.
* இந்தப்பாடலுக்கு திரையரங்கில் அதிரடியான வரவேற்பு கிடைத்தது, உங்களை திரையில் பார்த்த அனுபவம் பற்றி?
நான் திரைப்படத்திற்கு பாடியிருக்கிறேன் என நான் சொன்ன பொழுது யாருமே நம்பவில்லை. எனவே, நான் நடித்ததைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. எனவே, ரிலீஸ் ஆன அன்று முதல் ஷோவைக் கண்டேன். என்னுடைய பாடலுக்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு எனக்கு கண்ணீர் வர வழைத்தது. என்னால் விவரிக்க முடியாத அளவிலான சந்தோஷம்.
அதன்பின் குடும்பத்துடன் மாலை மீண்டும் திரையரங்குக்கு சென்றேன். என்னுடைய அருகில் என் அம்மா அமந்திருந்தார்கள். என்னுடைய பாடல் திரையில் வந்தபொழுது கண்கலங்கினார். என்னுடைய தாய்க்கு காது கேட்காது. இருப்பினும் என்னுடைய தாய்க்கு கிடைத்த மகிழ்ச்சியை ஒரு முத்தத்தாலே மொத்தமாய் தெரிவித்து விட்டார். இதைவிட எனக்கு வேறு என்ன வெற்றியை உரக்க சொல்லிவிட முடியும்...
Tags: News, Madurai News, Star