தமிழை பயன்பாட்டு மொழியாக மாற்ற அனைத்து மாவட்டங்களிலும் பயிலரங்கங்கள் நடக்கவுள்ளன
Posted on 20/10/2016
ஆட்சி மொழி தமிழை பயன்பாட்டு மொழியாக மாற்ற, ஊழியர்களின் திறன்களை ஆய்வு செய்வதற்கு தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தற்போது மாவட்டங்களில் ஆட்சி மொழி பயிலரங்கங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடக்க உள்ளன. இதில் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்று, ஆட்சி மொழி குறித்து அரசு ஊழியர்களுக்கு தெளிவாக விளக்க உள்ளனர்.
மேலும் தமிழக கலெக்டர் அலுவலகங்களில் உள்ள துறைகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் ஆட்சி மொழியான தமிழ் பயன்பாட்டை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பயிலரங்கங்கள்: அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் 15 நாட்களில் ஆட்சி மொழி பயிலரங்கங்கள் நடக்க உள்ளன. இதில் அரசு அலுவலகங்களில் பயன்பாட்டு தமிழை வளர்ப்பது குறித்தும், தமிழ் மொழி வளர்ச்சியின் தேக்கநிலையை களைவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் பதிவேடுகள் பராமரிப்பு முதல் அனைத்து அலுவலக நடவடிக்கைகளும் தமிழ் வழி பயன்பாட்டிற்கு மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனரகம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசுத்துறைகளில் தமிழ் மொழி பயன்பாடுகளை ஆய்வு செய்து வந்தோம். ஊராட்சிகள் வாரியாகவும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். சிறந்த தமிழ் மொழி பயன்பாடுள்ள துறைகளுக்கு சன்மானமும் உண்டு, என்றார்.
Tags: News, Madurai News, Art and Culture, Coaching