தங்கக்கட்டுப்பாட்டால் மக்கள் பீதி அடைய வேண்டாம்!
Posted on 01/12/2016
இந்தியாவின் தற்போதைய மோடி அரசு கறுப்பு பணம், கள்ளப்பணம் மற்றும் ஊழல் ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு பல்வேறு விதமான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அவற்றில் முதல் கட்டமாக மிக அண்மையில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கடந்த நவம்பர் 8-ம் தேதி முதல் செல்லாது என அறிவித்து அவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான விதிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளது. இந்த விஷயத்தில் ஒவ்வொரு நாளும் ரிசர்வ வங்கியின் மூலமாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது சில தற்காலிக பிரச்சினைகள் மக்களுக்கு ஏற்பட்டாலும் இந்த செல்லாத நோட்டு அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தை கண்டிப்பாக உயர்த்தவே செய்யும்.
இதற்கு அடுத்தபடியாக, தற்போது தங்கத்தை கையிருப்பில் வைப்பதற்கான அளவு பற்றியதான கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தங்க கையிருப்பு அளவு நிர்ணயம் என்பது ஒரு மிகச் சாதாரணமான விஷயமேயாகும். இந்த விஷயத்தை சில ஊடகங்கள் பெரிதுப் படுத்தி மக்களை வெகுவாக குழப்புகின்றார்கள். உண்மையைச் சொல்லப்போனால், இது ஏற்கனவே இருந்து வந்த சட்டம் தான், புதிதாக ஏற்றப்பட்டது அல்ல. இந்த சட்டத்திற்கு சற்று அழுத்தத்தை கொடுத்து அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒருவர் தன் சேமிப்பு அல்லது பரம்பரை வழி வந்த அன்பளிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வைத்துள்ள அனைத்து தங்க இருப்பும் இந்த வரன் முறைக்கு உட்பட்டதாக இருக்கும். தற்போது அறிவிக்கப்பட்ட அளவிற்கு மேல் தங்கம் இருப்பில் வைத்திருப்பவர்கள், அதற்குண்டான சரியான கணக்குகளை வைத்திருந்தால், இந்த விஷயத்தில் எந்தவிதமான சட்டமுறை பாதிப்பும் வருவதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதி. இந்த தங்கக்கட்டுப்பாட்டு அறிவிப்பால் தங்க சேமிப்பு பரவலாக குறையும் வாய்ப்பு உள்ளது, இதனை கொஞ்சமும் மறுப்பதற்கில்லை. மற்றபடி இதில் கலக்கம் அடைவதற்கு எந்தவித காரணமும் இல்லை.
கணக்கில் வைக்கப்படாத அல்லது வைத்திருக்கும் அதிகப்படியான தங்கத்தின் எடை-அளவிற்கு சரியான கணக்கு பராமரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படாத போது தான் பிரச்சினை உருவாகின்றது. அதுவும் இவ்வகை நிகழ்வுகள் வருமான வரி சோதனைகளின் போது கண்டு பிடிக்கப்பட்டால் அவை கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வகை நிகழ்வுகள் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கோ அல்லது பத்தாயிரத்தில் ஒருவருக்கோ இந்த பிரச்சினை உருவாவதற்கு வாய்ப்புள்ளது. எனவே நடுத்தர மக்கள் மற்றும் சாமானிய மக்கள் இந்த விஷயத்தில் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த காரணத்தை வைத்து சிலர் உங்களை நூதனமாக ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இவ்வகையில் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியமாகும்.
Tags: News, Lifestyle, Art and Culture