தீபங்களின் அணிவரிசையே தீபாவளி!
Posted on 26/10/2016
தீபாவளி, தீபாணாம் ஆவளி. தீபாவளி, தீபங்களின் அணிவரிசை எனப்பொருள். உலகில் உள்ள அனைவரும் ஜாதி, மத, இன, மொழி, அந்தஸ்து, நிறம் என எந்த வெறுப்பும் இன்றி கொண்டாடும் ஒரே பண்டிகை இந்த தீபாவளி.
இதை கொண்டாடுவதற்கு பல்வேறு காரணங்களும் கதைகளும் உள்ள நிலையில் நாம் அனைவரும் இந்த பண்டிகையை கொண்டாட ஒரே காரணம் ஆனந்தமாக இந்நாளில் இருக்க வேண்டும் என்பதே. தீபாவளி தினம் மட்டும் இன்றி தினமும், ஒவ்வொரு நொடியும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். உலகில் உள்ள அனைவரும், பிறந்ததிலிருந்து இறப்புவரை ஒவ்வொரு நொடியிலும் துளாவிக் கொண்டிருப்பது ஆனந்தத்தை. இதில் ஆச்சரியம் என்னவெனில், உலகில் உள்ள அனைவரும் தேடியும் இது வரை அந்த ஆனந்தத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. இதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதற்கு காரணம் என்ன? உலகில் யாராலும் ஆனந்தமாக இருக்க இயலவில்லை. இதற்கான காரணத்தையே தீபாவளி சுட்டிக்காட்டுகிறது.
இவ்வுலகமே இன்பத்தை இருளில் தேடி வருகிறது. இருள் என்றால் அறியாமை, மாயை, இருள், நல்லவர்களுக்கு விருப்பமற்ற பயத்தை ஏற்படுத்தும், தீய எண்ணங்களை ஊக்குவிக்கும் ஒன்று. இந்த இருள் எனும் மாயை விலகி கடவுள் எனும் ஒளி தோன்றினால் மட்டுமே இன்பத்தை அடைய இயலும்.
மாயை என்றால் என்ன? இல்லாத ஒன்றை இருப்பதாக நினைப்பது, கானல் நீரைப் போல, தூரத்திலிருந்து பார்த்தால் தண்ணீர் இருப்பது போல் தோன்றும். ஆனால் அங்கு சென்று பார்த்தால் தண்ணீர் இராது. இதுதான் நம் ஆனந்தத்தின் நிலைமையும். பள்ளிக்குச் சென்று கல்வி கற்றால் இன்பமடையலாம், பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றால் பன்னிரெண்டாம் வகுப்பில்..... நல்ல கல்லூரியில் சேர்ந்தால் இன்பமடையலாம். நல்ல வேலைக்குச் சென்றால்..... நிறைய பணம் சம்பாதித்தால்... திருமணம் செய்தால் இன்பமடையலாம், குழந்தை பிறந்தால், வீடு கட்டினால், வாகனங்கள் வாங்கினால் என வாழ்க்கை முழுவதும் இதை செய்தால் இன்பம், அங்கு சென்றால் இன்பம், இது இன்பம், அது இன்பம் என வாழ்க்கையின் இறுதிவரை இன்பத்தை தேடிக்கொண்டே இருக்கிறோம், ஆனால் முழுமையான இன்பத்தை அடைந்தபாடில்லை. இதற்கு காரணம் நாம் இன்பத்தை அறியாமை இருளில், மாயையில், அதாவது இந்த உடலில், உடல் சார்ந்த புலன்கள் மற்றும் இவ்வுலக பொருட்களில் தேடி அலைகிறோம். இதில் இன்பம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஞானம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஞானம் எனும் ஒளி தேவை. இதையே தீபாவளி நமக்கு உணர்த்துகிறது.
வேதங்களில், “தமஸோமா ஜோதிர்கமய” என கூறப்பட்டுள்ளது. அதாவது இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வாருங்கள். இருளில் நம் கைகளையே நம்மால் காண இயலாது. பிறகு இன்பத்திற்கான காரணத்தை எவ்வாறு காண்பது? எனவே இவ்வுலகில் உள்ள அனைவரும் உண்மையான இன்பத்தை அடைய இருளிலிருந்து விலகி, வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காகவே அனைத்து மத நூல்களும் கடவுளால் இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக பகவத் கீதை, நேரடியாக கடவுளே நமக்கு அளித்துள்ள ஞான ஒளி, அதில் உள்ள விசயங்களை கற்று உண்மையான இன்பத்தை அடைவதே தீபாவளியின் நோக்கம். “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறான் ஞானத்தங்கமே. அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே.” இதுவே நம் நிலைமை. துன்பத்திற்கெல்லாம் காரணமாக இருக்கும், நிலையற்ற ஜட உடலை கொண்டு உலகில் நிரந்தரமான அளவு கடந்த இன்பத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். இவற்றில் இன்பம் இல்லை என்று முதலில் உணர இருளிலில் இருந்து வெளிச்சத்திற்கு வர வேண்டும்.
- வம்ஸி தாரி தாஸ்
தொடர்புக்கு: 9677914980
Tags: News, Lifestyle, Academy